2023-01-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தினதும் வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினதும் கட்டுக்காப்பிலுள்ள காடுகள் சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்த்தல் - வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தினதும் வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினதும் கட்டுக்காப்பிலுள்ள காடுகளில் நீண்டகாலமாக குடியிருக்கும் அல்லது கமத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரச்சினைகள் பல வருடங்களாக கலந்துரையாடப்பட்ட போதிலும் இதன் பொருட்டு இதுவரை நிரந்தர தீர்வுகள் வழங்கப்படவில்லை. குறித்த பிரச்சினைகளுக்கு துரிதமாக தீவினை வழங்கும் நோக்கில் மாண்புமிகு சனாதிபதி அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் உரிய காலக்கட்டமைப்புடனான நிகழ்ச்சித்திட்ட மொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. உரிய பிரச்சினைகள் இலங்கையின் சகல மாவட்டங்களுக்கும் பொதுவாக தாக்கத்தைச் செலுத்துவதோடு, ஆரம்ப கட்டமாக காடுகள் பரவலாக உள்ள மற்றும் யுத்த நிலைமை காணப்பட்ட மாவட்டங்களான யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அநுராதபுரம், பொலன்நறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்ங்களில் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைச்சரவையின் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது. |