2022-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சிறிய தேயிலை மற்றும் இறப்பர் தோட்ட மறுமலர்ச்சி கருத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் கிராமிய நிதியிடல் நிகழ்ச்சித்திட்டம் - சிறிய தேயிலை மற்றும் இறப்பர் தோட்ட மறுமலர்ச்சி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கும் கமத்தொழில் அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்திற்கும் இடையில் உடன்படிக்கையொன்று செய்துகொள்ளப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் கீழ் "கிராமிய நிதியிடல் நிகழ்ச்சித்திட்டம்" செயற்படுத்தப்படுவதோடு, இந்த நிகழ்ச்சித்திட்டம் 2022‑12‑31 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையிலிருந்து மேலும் 172.35 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகையானது பயனாளிகளுக்கு கடனாக வழங்கப்படவுள்ளது. ஆதலால், இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கால எல்லையை 2023‑06‑30 ஆம் திகதிவரை நீடிக்கும் பொருட்டு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |