2022-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையின் சுகாதார அமைச்சுக்கும் இந்தியாவின் வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல் - ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் எலும்பு மச்சை மாற்று சிகிச்சை நிகழ்ச்சித்திட்டமானது 2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இதற்குத் தேவையான பதவியணியினரை பயிற்றுவிக்கும் பொருட்டு 2017 ஆம் ஆண்டில் இந்தியாவின் வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி ஒத்தாசை வழங்கியுள்ளது. தற்போது ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் எலும்பு மச்சை மாற்று சிகிச்சைக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் தாபிக்கப்பட்டுள்ளதோடு, இந்த பணியினை மிக பயனுள்ள வகையில் நடாத்திச் செல்வதற்கு முறையான ஆலோசனை மற்றும் பயிற்சி துறைகளில் ஒத்துழைப்பினை வழங்குவதற்கு இந்த மருத்துவ கல்லூரி அதன் உடன்பாட்டினைத் தெரிவித்துள்ளது. இதற்கிணங்க சுகாதார அமைச்சுக்கும் இந்தியாவின் வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |