2022-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பங்களிப்பு சனநாயகத்தை பலப்படுத்துவதன் சார்பில் 'மக்கள் சபையை' உருவாக்குவதற்காக 'தேசிய மக்கள் சபை செயலகத்தை' தாபித்தல் - இலங்கையில் இதுவரை நடைமுறையிலுள்ள பிரதிநிதித்துவ சனநாயக கட்டமைப்பின் மூலம் உண்மையான மக்கள் பிரச்சினைகள் போதுமான அளவு கையாளப்படுவதில்லையெனவும், இந்த முறையில் நிருவாக மையம் மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்பு விலகிச் செல்கின்றதெனவும் கொள்கை தீர்மானங்களை எடுக்கும் செயற்பாட்டில் பொதுமக்களின் கருத்துக்கள் போதுமானளவு செவிமடுக்கப்படுவதில்லை யெனவும் இது சம்பந்தமாக சமூக ரீதியில் விமர்சனங்கள் எழுந்துள்ளதெனவும் இந்த விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தில் பிரதிநிதித்துவ சனநாயகத்திற்கு எதிரான கருத்துக்கள் மற்றும் எதிர்ப்புகள் எழுகின்றதெனவும் தெரியவந்துள்ளது. இந்த நிலைமையின் கீழ் கிராமிய மட்டத்தில் பங்களிப்பு சனநாயக அம்சங்களுடன் செயற்படும் கட்டமைப்பில் அரசாங்க அதிகாரிகளும் பொதுமக்களும் இணைந்து கிராமிய பிரச்சினைகளை கலந்துரையாடிக்கூடிய, அபிவிருத்திக்கான முக்கிய தீர்மானங்களை எடுக்கக்கூடிய மற்றும் கிராமிய மக்களை தீர்மானங்கள் எடுக்கும் செயற்பாட்டில் பங்குபெறச் செய்விக்கக்கூடிய பலமிக்க பொறிமுறையொன்று அத்தியாவசியமாகவுள்ளது. அரச கொள்கை ஆக்கத்தில் மக்களுக்கு அவர்களுடைய கருத்துக்களை முனைப்பாக வழங்கக்கூடிய மற்றும் மக்கள் பங்களிப்புடன் இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தக்கூடிய ஏற்பாடுகளுடனான பொறிமுறையொன்றின் மூலம் உத்தியோகத்தர்களின் அதிகாரவாதம் மற்றும் எதேச்சதிகாரமான அரசியல் மயமாக்கல் என்பவற்றின் மூலம் நிகழக்கூடிய மக்களுக்கான அழுத்தங்களை பயனுள்ள வகையிலும் வினைத்திறனுடனும் தவிர்ப்பதற்கு இயலுமாகும். இதற்கிணங்க, அரசாங்க கொள்கை வகுப்பு மற்றும் இந்த கொள்கைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு பொதுமக்களின் பங்களிப்பினைப் பெற்றுக் கொள்ளகூடிய சுயாதீன நிறுவன கட்டமைப்புடன் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் முன்முயற்சியினால் மக்கள் சபை முறை தொடர்பிலான கருதுகோள் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கருதுகோள் பத்திரத்தின் மூலம் நாட்டின் சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் தழுவும் விதத்தில் கிராமிய மக்கள் சபையைத் தாபிப்பதற்கும் தேசிய மட்டத்தில் 'தேசிய மக்கள் சபை தாபிப்பதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த கருதுகோள் பத்திரத்தின் மூலம் பிரேரிக்கப்பட்டுள்ள மக்கள் சபை முறையை அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கையாக ஏற்றுக் கொள்வதற்கும் 'மக்கள் சபை முறையைத்' தாபிப்பதற்கான தேசிய மட்ட சுயாதீன மையநிலையமாக 'தேசிய மக்கள் சபை செயலகத்தை' தாபிப்பதற்குமாக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |