2022-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க சொத்துக்கள் முகாமைத்துவ சட்டமூலம் - 2022 நிதியாண்டிற்குரிய ஒதுக்கீட்டு சட்டத்தை திருத்துவதற்காக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் செய்யப்பட்ட வரவுசெலவுத்திட்ட உரையின்போது பொருளாதாரத்தை பலமிக்கதாக கட்டியெழுப்புதல், அரசாங்க சேவையின் வினைத்திறனை விருத்தி செய்தல் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான வளங்களை பயனுள்ள வகையில் முகாமித்தல் என்பவற்றை நோக்காகக் கொண்டு புதிய ஒருசில சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும் நடைமுறையிலுள்ள ஒருசில சட்டங்களிலுள்ள ஏற்பாடுகளை திருத்து வதற்குமான தேவை சுட்டிகாட்டப்பட்டது. இதற்கிணங்க, பொதுத் திறைசேரியின் கீழ் நிலவும் கணக்குத் தணிக்கையாளர் நாயகம் அலுவலகத்தின் பணிகளை விரிவுபடுத்தி அதற்கு சட்டத்தன்மையை வழங்குவதற்கும் தேசிய சொத்துக்கள் ஆவணமொன்றைத் தயாரிப்பதற்கும் அரசாங்க சொத்துக்கள் சம்பந்தமாக மையப்படுத்தப்பட்ட தரவு முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் பொருத்தமான ஏற்பாடுகளை உள்ளடக்கி அரசாங்க சொத்துக்கள் முகாமைத்துவத்திற்காக புதிய சட்டமூலமொன்றை அறிமுகப் படுத்துவதற்காக புதிய சட்டமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |