2022-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பெண் உப தபால்நிலைய அதிபர்கள் பிரசவ லீவு பெற்றுக் கொள்ளும் போது செலுத்தப்படும் பதிலீட்டு கொடுப்பனவை அதிகரித்தல் - இலங்கை உபதபால் நிலைய அதிபர்கள் சேவை பிரமாணக் குறிப்புக்கு அமைவாக பெண் உப தபால்நிலைய அதிபர்கள் அவர்களுடைய பிரசவத்தின் போது சொந்த செலவில் பதிலீட்டாளர் ஒருவரை சேவையில் ஈடுபடுத்துவதற்கு உட்பட்டு, தாபன விதிக் கோவையிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக பிரசவ லீவு பெற்றுக் கொள்ளும் உரிமை உள்ளதோடு, இந்தக் காலப்பகுதியில் பதிலீட்டுக் கொடுப்பனவாக 30 நாட்களுக்கான நாளாந்த சம்பளத்திற்குச் சமமான கொடுப்பனவு மாத்திரம் செலுத்தப்படும். உரிய பிரசவ லீவு காலப்பகுதியில் பதிலீட்டாளர் ஒருவரை சொந்த செலவில் சேவையில் ஈடுபடுத்த வேண்டியுள்ளமையினால் பெரும்பாலான பெண் உப தபால்நிலைய அதிபர்கள் அவர்களுடைய பிரசவ லீவினை 30 நாட்களுக்கு மாத்திரம் வரையறுத்துக் கொள்கின்றமை தெரியவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பினதும் அதேபோன்று ஏனைய மருத்துவ சிபாரிசுகளுக்கும் அமைவாக குழந்தை பிறந்ததிலிருந்து' ஆகக்குறைந்தது ஆறு (06) மாதங்கள் வரை தாய்ப்பால் வழங்குதல் வேண்டும். இதற்கிணங்க, பெண் உப தபால்நிலைய அதிபர்களுக்கு தற்போது செலுத்தப்படும் 30 நாட்கள் கொண்ட கொடுப்பனவிற்குப் பதிலாக 84 நாட்கள் கொண்ட கொடுப்பனவினை செலுத்தும் பொருட்டு வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |