2022-09-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய துப்பரவேற்பாட்டு கொள்கையும் துப்பரவேற்பாடு பற்றிய பிரதான திட்டமும் - வீட்டு கழிவுப் பொருட்கள், மனித கழிவுப் பொருட்கள் அதேபோன்று நிறுவன, வர்த்தக மற்றும் கைத்தொழில் கழிவுப் பொருட்கள் என்பவற்றின் பாதுகாப்பான முகாமைத்துவம் அதேபோன்று அவற்றைப் பாதுகாப்பாக திரட்டுதல், சுத்திகரித்தல், அப்புறப்படுத்துதல் உட்பட இவை சார்ந்த சுகாதார வழிமுறைகள் துப்பரவேற்பாடு என கருதப்படும். ஐக்கிய நாடுகள் அமைப்பினால் அதன் நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்களுக்கான நிகழ்ச்சி நிரலில் துப்பரவேற்பாட்டு சேவைகளை வழங்குதல் நாடொன்றின் அபிவிருத்தியில் பிரதான தேவையொன்றாக இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, துப்பரவேற்பாட்டு வசதிகளை வழங்குவதற்குரிய நிலைபேறுடைய அபிவிருத்தி குறியிலக்குகளை அடையும் பொருட்டு சகல தரப்பினர்களையும் பொதுவான கட்டமைப்பிற்குள் முறையான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வையின் கீழ் செயற்படுதலை உறுதிப்படுத்தும் விதத்தில் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உட்பட உரிய தரப்பினர்களின் ஆலோசனையுடன் நீர்வழங்கல் அமைச்சினால் தேசிய துப்பரவேற்பாட்டு கொள்கையும் துப்பரவேற்பாடு பற்றிய பிரதான திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டிலிருந்து 2030 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியினை தழுவும் விதத்தில் இந்த உத்தேச கொள்கையினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நீர்வழங்கல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |