2022-09-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு பிரிவொன்றைத் தாபித்தல் - அரசாங்கத்திற்குச் சொந்தமான வர்த்தக தொழில்முயற்சிகளின் வினைத்திறன் நீண்டகாலமாக திருப்திகரமற்ற நிலையில் உள்ளதோடு, சில தொழில்முயற்சிகள் பல்வேறுபட்ட காரணங்களினால் தொடர்ச்சியான நட்டத்தினைப் பெற்று வருகின்றன. இந்த நிலைமை பொதுத் திறைசேரிக்கு கடும் சுமையினை ஏற்படுத்துவதற்கு காரணமாய் அமைந்துள்ளமையினால் இத்தகைய தொழில்முயற்சிகளை வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்துவதற்கு மாற்று பொறிமுறையொன்று அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கிணங்க, பொது திறைசேரிக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையினை குறைப்பதற்கான வழிமுறைகளை இனங்காணுதல், அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் மொத்த வினைத்திறனை விருத்தி செய்தல் என்பவற்றை நோக்காகக் கொண்டு, அரசாங்க தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பது சம்பந்தமாக தேவையான வழிகாட்டல்கள் மற்றும் ஒத்துழைப்பினை வழங்குவதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் அரசாங்க தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு பிரிவொன்றைத் தாபிக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |