2022-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புனர்வாழ்வளிப்பு பணியக சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் - போதைப்பொருளில் தங்கி வாழ்பவர்கள், யுத்தத்தில் ஈடுபட்ட போராளிகள், வன்முறைமிக்க தீவிரவாதக் குழுக்களின் அங்கத்தவர்கள் மற்றும் வேறு ஏற்புடைய தனிப்பட்ட குழுக்களுக்கு சிகிச்சையளித்தல், புனர்வாழ்வளித்தல், பின்னரான பாதுகாப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளை நிறைவேற்றுவதற்காக புனர்வாழ்வளிப்பு பணியகமொன்றைத் தாபிக்கும் பொருட்டு சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக 2021‑04‑19 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |