2022-08-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீட்பு அவசர உதவி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - வறுமை மற்றும் அனர்த்தத்திற்கு ஆளானவர்களின் உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் "உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீட்பு அவசர உதவி கருத்திட்டம்" என்னும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்திற்குத் தேவையான நிதி ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியின் கீழ் தற்போது செயற்படுத்தப்பட்டுவரும் கருத்திட்டங்களிலுள்ள மேலதிக நிதியினை மீளமைத்து ஏற்பாடு செய்து கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக கருத்திட்ட செயற்பாடுகளுக்கு நிதியிடுவதற்கு செழிப்பான மற்றும் மீள்தன்மையுடைய ஆசிய பசுபிக் வலயத்திற்கான யப்பான் நிதியத்தினால் 3 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கொடையொன்றை ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணக்கப் பேச்சுக்களை நடாத்துவதற்கும் இதற்கிணங்க உரிய உடன்படிக்கைகளை செய்து கொள்வதற்குமாக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |