2022-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பெற்றோலியப் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளிலுள்ள கம்பனிகளுடன் நீண்டகால உடன்படிக்கைகளின் மீது எரிபொருள் பெற்றுக் கொள்ளல் - நாட்டின் மொத்த எரிபொருள் விநியோகத்தில் சுமார் 90 சதவீதம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பங்களிப்பு உள்ளதோடு, மீதி 10 சதவீதமானது இலங்கை இந்திய எண்ணெய்க் கம்பனியினால் விநியோகிக்கப்படுகின்றது. தற்போது இலங்கை முகங்கொடுத்துள்ள அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக நாட்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வது கடும் சவால் மிக்க பணியொன்றாக மாறியுள்ளது. இந்த நிலைமையின் கீழ் பெற்றோலியப் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளிலுள்ள எண்ணெய்க் கம்பனிகளுடன் நீண்டகால உடன்படிக்கைகைளச் செய்து கொண்டு நாட்டின் அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தாக்கத்தை ஏற்படுத்தாத விதத்தில் குறித்த கம்பனிகளின் நிதிகளைப் பயன்படுத்தி எரிபொருள் இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு இந்த கம்பனிகளுக்கு வாய்ப்பு அளிப்பது பொருத்தமானதென தெரியவந்துள்ளது. இதற்கிணங்க, முறையான வழிமுறையினை பின்பற்றி தெரிவுசெய்யப்படும் எண்ணெய்க் கம்பனிகளுடன் நீண்டகால உடன்படிக்கைகளின் மீது இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்து விநியோகித்து விற்பனை செய்வதற்கு இந்தக் கம்பனிகளுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |