2022-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சருவதேச வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக 'தேசிய ஒற்றை சாளர' கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் - உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் உடன்படிக்கையானது 2017 பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இலங்கையும் இந்த உடன்படிக்கையின் ஒருதரப்பாகும். இந்த உடன்படிக்கைக்கு அமைவாக ஒரு நாட்டின் எல்லைகளுக்கு ஊடாக நாடுகளுக்கு இடையில் செய்யப்படும் வர்த்தக நடவடிக்கைகளின்போது (இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மீள் கப்பலில் ஏற்றல்) பங்குடமை வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்குறுத்தும் அதிகாரபீடங்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் தரவுகளை சமர்ப்பிப்பதற்கு நிலையமொன்றினை (ஒற்றை சாளரம்) ஆரம்பித்து பேணுவதற்கு இலங்கை கடப்பாடுடையது உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் இதன் பொருட்டு கருத்திட்டத்திற்குரிய முறையான திட்டமொன்று 2018 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பிரகாரம் மூன்று கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தவுள்ள இந்த கருத்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு அண்ணளவாக 15 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாவதோடு, உலக வங்கி மற்றும் ஏனைய அபிவிருத்தி தரப்பினர்களிடமிருந்து இதற்குத் தேவையான நிதியினை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, உத்தேச 'தேசிய ஒற்றை சாளர' கருத்திட்டத்தினை செயற்படுத்தும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |