2022-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உள்நாட்டு மொத்த உற்பத்தியை கணிப்பிடுதல் - பொருளாதாரத்தின் உண்மையான போக்கினை சரியாக இனங்காணுதல், பொருளாதார அபிவிருத்தி வேகம் பற்றிய பெறுமதிகளை மிகச் சரியாக மதிப்பிடுதல், தேசிய கணக்குகள் தொடர்பில் உரிய சர்வதேச நிறுவனங்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய சிபாரிசுகள் மற்றும் வழிமுறைகளை இணங்கியொழுகுதல் போன்ற விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தொகைமதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தினால் 05 வருடங்களுக்கு ஒரு தடவை தேசிய கணக்குகளை மதிப்பிடும் அடிப்படை வருடமானது இற்றைப்படுத்தப்படும். இதற்கிணங்க, தேசிய கணக்குகளை தயாரிக்கும் போது அடிப்படையாகக் கொள்ளப்படும் 2010 ஆம் ஆண்டிற்குப் பதிலாக புதிய அடிப்படை ஆண்டாக 2015 ஆம் ஆண்டினை ஏற்புடைத்தாக்குக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொகைமதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தினால் 2015 ஆம் ஆண்டினை அடிப்படை ஆண்டாக பயன்படுத்தி 2015 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை காலாண்டு மற்றும் வருடாந்த தேசிய கணக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கைகளை வௌியிடுவதற்கும் 2022 முதல் காலாண்டிலிருந்து முன்னோக்கியதாக 2015 புதிய அடிப்படை ஆண்டின் கீழ் தேசிய கணக்கு மதிப்பீடுகளை வௌியிடுவதற்குமாக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |