2022-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பல்வேறுபட்ட தரப்பினர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் அந்நிய செலாவணி மற்றும் வலுசக்தி விநியோகம் சார்ந்த நிதி பிரேரிப்புகளை ஆராயும் பொருட்டு பொறிமுறையொன்றைத் தாபித்தல் - நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக சில நட்பு நாடுகள், சருவதேச விநியோகஸ்தர்கள் மற்றும் உள்நாட்டு தனியார் துறை என்பன பல்வேறுபட்ட வடிவங்களில் இருதரப்பு சலுகைக்கடன்கள், வலுசக்தி விநியோகம் மற்றும் வலுசக்தி துறைசார்ந்த பிரேரிப்புகள் போன்றவற்றை முன்வைக்கின்றன. இவ்வாறு முன்வைக்கப்படும் சில பிரேரிப்புகள் நாடு முகங்கொடுத்துள்ள அந்நிய செலாவணி நெருக்கடிக்கு பயனுள்ள பிரேரிப்புகளாக அவதானிக்கப்பட்டாலும் இது தொடர்பில் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு நடைமுறையிலுள்ள வழிமுறைகளில் திட்டவட்டமான வசதிகள் இல்லை. ஆதலால், இந்த பிரேரிப்புகளின் சமகால முக்கியத்துவத்தினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அவற்றை ஆராய்ந்து பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு பிரதம அமைச்சரின் செயலாளரின் தலைமையில் நான்கு அமைச்சுகளின் செயலாளர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |