2022-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
எம்பிலிபிட்டிய காகித தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளை அரசாங்க ‑ தனியார் பங்குடமையின் கீழ் மீள ஆரம்பித்தல் - வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கம்பனிக்குச் சொந்தமான எம்பிலிபிட்டிய காகித தொழிற்சாலை 2012 ஆம் ஆண்டு தொடக்கம் மூடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை அமைந்துள்ள காணி மற்றும் தொழிற்சாலை கட்டடங்களை முப்பது (30) வருட காலப்பகுதிக்கு உள்நாட்டு முதலீட்டுக் கம்பனியொன்றான Korean Spa Packaging (Pvt.) Ltd, கம்பனிக்கு வழங்குவதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் உரிய காணியை முறையாக வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கம்பனிக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமையினால், குறித்த அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியாமற் போயுள்ளது. இந்த தொழிற்சாலை அமைந்துள்ள ஏக்கர் 111 றூட் 02 பேர்ச்சர்ஸ் 33 விஸ்தீரணம் கொண்ட காணியை நீண்டகால குத்தகை அடிப்படையில் வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கம்பனிக்கு கையளிப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கம்பனியும் Korean Spa Packaging (Pvt.) Ltd, கம்பனியும் உடன்பாட்டிற்கு வந்துள்ள நிபந்தனைகளுடனான உடன்படிக்கையைச் செய்து கொண்டதன் பின்னர் எம்பிலிபிட்டிய காகித தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளை அரசாங்க ‑ தனியார் பங்குடமையின் கீழ் மீள ஆரம்பிக்கும் பொருட்டு கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |