2022-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் ஐக்கிய இராச்சியத்தின் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்து அரசாங்கத்திற்கும் இடையில் சுகாதார பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை - இரு நாடுகளுக்கும் இடையில் சுகாதார துறை ஒத்துழைப்புகளை விருத்தி செய்து கொள்வதற்கும் ஐக்கிய இராச்சியத்தில் சேவையாற்றும் சுகாதார சேவையைச் சேர்ந்த தொழில் சார்பாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துதல் அடங்கலாக இரு தரப்பினரும் உடன்படும் விடயங்கள் சம்பந்தமாக இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது. முக்கியமாக ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியதன் பின்னர் அந்நாட்டின் சுகாதார துறையில் உருவாகிவரும் தொழில் வாய்ப்புகளை இலங்கைக்கு பெற்றுக் கொள்வதற்கு இதன் கீழ் வாய்ப்பு கிடைக்கப் பெறும். இதற்கிணங்க, இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு கைத்தொழில் அமைச்சரினாலும் வெளிநாட்டு அமைச்சரினாலும் சுகாதார அமைச்சரினாலும் கூட்டாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |