2022-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புத்கமுவ கால்வாய் மழை காலங்களில் நிரம்பி வழிந்தோடுவதன் காரணமாக பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு வீடுகளை வழங்குதல் - மண்சரிவு ஆபத்துமிக்க பிரதேசங்களில் வசிக்கும் குடும்பங்களை மீளக் குடியமர்த்தும் நிகழ்ச்சித்திட்டமானது தற்போது 14 மாவட்டங்களில் செயற்படுத்தப்பட்டுள்ளதோடு 1,558 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளன. அதேபோன்று மண்சரிவு ஆபத்து இல்லாத போதிலும் கடலரிப்பு, ஆற்றங்கரை அரிப்பு, அடிக்கடி வௌ்ளத்திற்கு உள்ளாதல் போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் குடும்பங்களை வேறு இடமொன்றில் குடியமர்த்துவதற்கு இத்தகைய குடும்பங்களையும் மீளக் குடியமர்த்தும் நிகழ்ச்சித்திட்டத்தில் சேர்த்துக் கொள்வது பொருத்தமானதென தெரியவந்துள்ளது. இதற்கிணங்க, ஶ்ரீ ஜயவர்த்தனபுர, கோட்டை பிரதேச செயலாளர் பிரிவின் 514 வெலிகட கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் புத்கமுவ கால்வாய் மழை காலங்களில் நிரம்பி வழிவதன் காரணமாக அடிக்கடி நிகழும் வௌ்ளப்பெருக்கு நிலைமையினால் பாதிக்கப்படும் 42 குடும்பங்களை வேறு இடமொன்றில் மீளக் குடியமர்த்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இந்த 42 குடும்பங்களையும் அவர்கள் குடியிருக்கும் இடங்களிலிருந்து அப்புறப்படுத்தி நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் குறைந்த வருமானம் பெறுவோருக்காக செயற்படுத்தப்படும் மாடி வீட்டுக் கருத்திட்டங்களிலிருந்து 42 வீடுகளை இந்த குடும்பங்களுக்கு வழங்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |