2021-12-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
குண்டசாலை ஹோட்டல் பாடசாலை தாபிக்கப்பட்டுள்ள காணியை இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்திற்கு உடைமையாக்குதல் - விருந்தோம்பல் துறை மற்றும் சுற்றுலாத் தொழில் என்பவற்றின் பல்வேறுபட்ட பிரிவுகள் சார்பில் இளைஞர் யுவதிகளை பயிற்றுவிப்பதற்கு இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் நாட்டின் 09 மாகாணங்களையும் தழுவும் விதத்தில் பயிற்சி நிலையங்கள் நடாத்திச் செல்கின்றது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலிருந்த 0.545 ஹெக்டாயர் விஸ்தீரணமுடைய காணியில் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் குண்டசாலை ஹோட்டல் பாடசாலை தாபிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் பாடசாலையானது 2009 ஆம் ஆண்டில் சுமார் 450 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும் குறித்த காணிக்கான சட்டபூர்வ உரித்து இதுவரை இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்திற்கு கிடைக்கவில்லை. ஆதலால் உரிய காணித் துண்டை அரசாங்க காணி கட்டளைச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் கொடையொன்றாக இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்திற்கு உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டு சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |