2021-11-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பாரிய அளவிலான அபிவிருத்தி கருத்திட்டங்களின் 2021 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு முடிவிலான முன்னேற்றம் - 2021 ஆம் ஆண்டில் 47 அமைச்சுக்களின் கீழ் 1,000 மில்லியன் ரூபாவை விஞ்சும் 332 பாரிய அளவிலான அபிவிருத்தி கருத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளதோடு, அவற்றின் காலம் 2030 ஆம் ஆண்டுவரை விரிவடைந்துள்ளது. இந்தக் கருத்திட்டங்களின் மொத்த முதலீட்டு பெறுமதியானது 6,899 பில்லியன் ரூபாவாகும். இதில் 2,642 பில்லியன் ரூபா பெறுமதி கொண்ட 95 கருத்திட்டங்கள் "சுபீட்சத்தின் நோக்கு" என்னும் அரசாங்கத்தின் அபிவிருத்தி கொள்கை கட்டமைப்பின் இலக்கினை அடைவதற்காக 2021 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய கருத்திட்டங்களாகும். இதன் கீழ் சுகாதாரம், கல்வி, குடிநீர் விநியோகம், வீதி இணைப்புகளை விருத்தி செய்தல், நீர்ப்பாசன முறைமைகளை விருத்தி செய்தல் மற்றும் கிராமிய, நகர அபிவிருத்தி போன்ற துறைகளுக்குரியதான கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவும் COVID - 19 தொற்றுநிலைமை காரணமாக கட்டட பொருட்கள், ஊழியர் பற்றாக்குறை, இறக்குமதி கட்டுப்பாடு, குடிவரவு குடியகல்வு வரையறைகள் இந்தக் கருத்திட்டங்களின் சுமுகமான செயற்பாட்டிற்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளன. ஆயினும் குறித்த காலாண்டினுள் 448 பில்லியன் ரூபாவினை இலக்காகக் கொண்ட செலவில் 63 சதவீதம் கொண்ட தொகையானது உரிய கருத்திட்டம் சார்பில் செலவு செய்யப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டங்களை இலக்காகக் கொள்ளப்பட்ட காலப்பகுதியினுள் நடைமுறைப்படுத்தி அவற்றின் நலன்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் குறித்த கருத்திட்டங்கள் சம்பந்தமாக எழும் பிரச்சினைகளை துரிதமாக தீர்ப்பதற்கு மாதாந்தம் நடாத்தப்படும் முன்னேற்ற மீளாய்வு குழு கூட்டங்களுக்கு பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சு, நிதி அமைச்சு மற்றும் ஏனைய உரிய அரசாங்க நிறுவனங்களின் சிரேட்ட உத்தியோகத்தர்களின் பங்களிப்பினைப் பெற்றுக் கொள்வதற்காக அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |