2021-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பிலான சமவாயத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்குமாக விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை திருத்துதல் - அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பிலான சமவாயத்தின் தரப்பு நாடொன்றாக இலங்கை 1979 மே மாதம் 04 ஆம் திகதியன்று இந்த சமவாயத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த சமவாயத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு நாட்டில் செயல்வலுவளிப்பதற்கு இயலுமாகும் வகையில் 2009 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கு 2016 செப்ரெம்பர் 06 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட திருத்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |