2021-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
குருநாகல் மாகாண பொது வைத்தியசாலையில் பாதியளவு நிர்மாணிக்கப்பட்டுள்ள காவறைத் தொகுதியைப் பூரணப்படுத்துதல் - குருநாகல் மாகாண பொது வைத்தியசாலையானது 2,355 கட்டில்கள், 57 காவறைகள் மற்றும் 28 விசேட பிரிவுகள் என்பவற்றை கொண்டுள்ளது. இந்த வைத்தியசாலையின் அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக 2007-2009 காலப் பகுதியில் புதிய காவறைகளை தாபிப்பதற்காக ஐந்து மாடி கட்டடமொன்றை கட்டம் கட்டமாக நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் இதுவரை இந்த நிர்மாணிப்புக்கான இரண்டாம் மாடி வரை மாத்திரம் பூரணப்படுத்தப்பட்டுள்ளது காலஞ்சென்ற திருமதி ஐலின் த மெல் அவர்களின் மரணசாசனப் பத்திரத்திற்கு அமைவாக குருநாகல் வைத்தியசாலையில் காவறையொன்றினை அல்லது கட்டடத்தின் ஒரு பகுதியை நிர்மாணிப்பதற்கு நன்கொடைத் தொகையொன்று ஒதுக்கப்பட்டுள்ளதோடு, அவருடைய சொத்துக்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள தரப்பினால் குறித்த ஐந்து மாடி கட்டடத்தின் நிர்மாணிப்புப் பணிகளை பூரணப்படுத்தி தருவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டின் பிரகாரம் குறித்த கருத்திட்டத்தை இரண்டு (02) வருட காலத்திற்குள் நடைமுறைப்படுத்தி பூரணப்படுத்துவதற்கு திருமதி ஐலின் த மெல் அவர்களின் சொத்துக்களின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள தரப்பினருடன் உடன்பாட்டு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |