2021-09-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
COVID - 19 தொற்று நிலைமையில் கல்வி முறைமைக்குள் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கு "நெனச" கல்வி தொலைக்காட்சி அலைவரிசைகளின் எண்ணிக்கையினை அதிகரித்தல் - கல்விக்காக குறித்தொதுக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் மொழிமூல இரண்டு கல்வி அலைவரிசைகள் ஊடாக 2018 ஆம் ஆண்டிலிருந்து டயலொக் நிறுவனமானது செய்மதி தொழினுட்பம் மூலம் "நெனச" என்னும் பெயரில் கருத்திட்டமொன்றைச் செயற்படுத்தி வருகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் டயலொக் நிறுவனத்தினால் அண்ணளவாக 2,200 பாடசாலைகளுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் டயலொக் இணைப்புகள் என்பன வழங்கப்பட்டுள்ளதோடு, குறித்த இணைப்புகளுக்கு மாதாந்த கட்டணம் அறவிடப்படுவதில்லை. COVID - 19 தொற்று நிலைமையில் கல்வி முறைமைக்குள் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கு "நெனச" கருத்திட்டம் இரண்டு (02) புதிய அலைவரிசைகள் அடங்கலாக நான்கு (04) அலைவரிசைகள் மூலம் 2021 செப்ரெம்பர் மாதம் 07 திகதியிலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கும் 2022 சனவரி மாதம் 01 ஆம் திகதியளவில் மொத்த அலைவரிசைகளின் எண்ணிக்கையை 10 ஆக அதிகரிப்பதற்கும் டயலொக் நிறுவனம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. |