2021-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
COVID - 19 நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான அத்தியாவசிய 300,000 லீற்றர் திரவ மருத்துவ ஒட்சிசனை வாராந்தம் இறக்குமதி செய்தல் - கடுமையான COVID - 19 நோயாளர்களுக்கு திரவ மருத்துவ ஒட்சிசன் விநியோகத்தை உறுதிசெய்யும் பொருட்டு 120,000 லீற்றர் ஒட்சிசன் மாதாந்தம் இறக்குமதி செய்வதற்காக 2021 மே மாதம் 24 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பரவிவரும் திரிபடைந்த COVID வைரஸ் வகை காரணமாக ஒட்சிசன் மீது தங்கியிருக்கும் நோயாளிகளின் அளவு அதிகரித்துள்ளமையினால் போதுமான அளவு ஒட்சிசன் தொகையினை நாட்டில் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு இயலுமாகும் வகையில் தற்போது மாதாந்தம் இறக்குமதி செய்யப்படும் 120,000 லீற்றர் ஒட்சிசனுக்குப் பதிலாக 300,000 லீற்றர் திரவ மருத்துவ ஒட்சிசன் இறக்குமதி செய்யும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |