2021-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
"சுகாதார முறைமை மேம்படுத்தல் கருத்திட்டத்தின்" கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து மேலதிக நிதி வசதிகளைப் பெற்றுக் கொள்ளல் - மிக பரந்துபட்ட ஆரம்ப சுகாதார சேவை முறைமையொன்றுக்கான அணுகுகையுடன் ஆரோக்கியமிக்க மக்களை உருவாக்கும் நோக்கில் "சுகாதார முறைமை மேம்படுத்தல் கருத்திட்டத்தை" நடைமுறைபடுத்தும் பொருட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 37.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் தொகையும் 12.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மானியமும் அடங்கலாக 50 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட நிதியினை இலங்கைக்கு வழங்கியுள்ளது. நாட்டில் நிலவும் COVID - 19 தொற்றுநிலைமையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் மேற்குறிப்பிட்ட தொகையிலிருந்து 15 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை COVID - 19 சார்ந்த செயற்பாடுகளுக்காக ஏற்கனவே ஒதுக்கியுள்ளது. இதற்கு மேலதிகமாக COVID - 19 தொற்றுநிலைமை காரணமாக அதிகரிக்கும் நோயாளிகளை முகாமிப்பதற்குத் தேவையான வசதிகளை செய்யும் பொருட்டு "சுகாதார முறைமை மேம்படுத்தல் கருத்திட்டத்தின்" கீழ் 125 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மேலதிக நிதியினைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த நிதியத்தினை பெற்றுக் கொள்வதற்கு ஆசிய அபிவிருத்தியுடன் இணக்கப்பேச்சுக்களை நடாத்தும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |