2021-08-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
எம்பிலிபிட்டிய விவசாயிகளின் தானிய களஞ்சியத்தை வாசனை திரவியங்கள் மற்றும் அது சார்ந்த உற்பத்திகள் சந்தைப்படுத்தல் சபைக்கு குத்தகை அடிப்படையில் வழங்குதல் - 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்பொன்றுக்கு அமைவாக 200 மில்லியன் ரூபாவை செலவு செய்து சுமார் 4,000 மெற்றிக்தொன் கொள்ளளவு கொண்ட தானிய களஞ்சியமானது நவீன கருவிகளுடன்கூடிய இரசாயனகூடம் மற்றும் தானியங்களை உலர்த்தும் இயந்திரம் என்பவற்றுடன் இரத்தினபுரி மாவட்டத்தின் எம்பிலிபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவில் தாபிக்கப்பட்டுள்ளது. 100 கிலோவொட் கொள்ளளவைக் கொண்ட சூரிய கலங்களின் மூலம் மின்சார உற்பத்தி முறைமையொன்று இந்த களஞ்சியத்தின் கூரையில் தாபிக்கப்பட்டுள்ளது. இந்த தானிய களஞ்சியத்தின் சொத்துக்கள் யாவும் இரத்தினபுரி மாவட்ட செயலாளரின் பொறுப்பில் உள்ளதோடு, மாவட்ட செயலாளரின் தலைமையிலான மதியுரைக் குழுவினூடாக அதன் முகாமைத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த களஞ்சியத்தை மிக பயனுள்ள வகையில் பயன்படுத்தும் வகையில் வாசனை திரவியங்கள் மற்றும் அது சார்ந்த உற்பத்திகள் சந்தைப்படுத்தல் சபைக்கு குத்தகை அடிப்படையில் வழங்கும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |