2021-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நீர்துறை சார்ந்த தற்கால மற்றும் எதிர் கால சவால்களுக்கு முகங்கொடுக்கும் பொருட்டு தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை சட்டத்தை திருத்துதல் - 1974 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் 1975 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையானது தற்போது 331 நீர்வழங்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி 2.4 மில்லியன் வீட்டு பாவனை இணைப்புகளையும் 207,000 வர்த்தக பாவனை இணைப்புகளையும் கையாள்கிறது. இதன் கீழ் நாட்டின் மொத்த பாதுகாப்பான குடிநீர் தழுவப்படும் 93.8 சதவீதத்திலிருந்து 43.8 சதவீதம் தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் பங்களிப்புடன் விநியோகிக்கப்படுகின்றது. ஆயினும் கடந்த சில வருடங்களுள் நிகழ்ந்துள்ள துரித நகரமயமாக்கல், காலநிலை மாற்றங்கள், நீருக்காக அதிகரித்துவரும் நுகர்வோரின் கேள்வி மற்றும் நீர் துறை சார்ந்த பணிகளுக்கு டிஜிட்டல் தொழிநுட்பத்தை பயன்படுத்துதல் போன்ற விடயங்களுக்கு எதிர்காலத்தில் தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இந்த நோக்கங்களுக்கு முகங்கொடுப்பதற்காக பல சந்தர்ப்பங்களில் தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை சட்டமானது திருத்தப்பட்டிருந்த போதிலும் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் இந்தச் சட்டத்தை மேலும் திருத்த வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை சட்டத்திற்கு செய்யவேண்டிய திருத்தங்கள் சம்பந்தமாக அரசாங்க / தனியார் துறை சார்ந்தவர்களிடமிருந்து பிரேரிப்புகளையும் சிபாரிசுகளையும் பெற்று ஆரம்ப வரைவினைத் தயாரிப்பதற்கு நீர்வழங்கல் அமைச்சின் செயலாளரின் தலைமையில் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு நீர்வழங்கல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |