2021-07-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிய பிள்ளைகளின் வீடியோ சாட்சிகளைப் பதிவு செய்யும் பொருட்டு மாகாண மட்டத்தில் ஒன்பது (09) அலகுகளைத் தாபித்தல் - பல்வேறுபட்ட துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகிய பிள்ளைகளினால் குறித்த சம்பவம் தொடர்பில் வழங்கப்படும் சாட்சிகள் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது மிக முக்கியமானவையாகும். ஆயினும் இவ்வாறு பாதிக்கப்பட்ட பிள்ளையொருவருக்கு நீதிமன்றத்தில் வௌிப்படையாக சாட்சி வழங்கும் போது பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றமையினால், இவ்வாறு வழங்கப்படும் சாட்சிகளை வீடியோ பதிவுகளாக பெற்றுக் கொண்டு சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் 1999 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க சாட்சிகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் மூலம் இலங்கை நீதி முறைமையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க 2001 ஆம் ஆண்டில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் வீடியோ சாட்சிகளைப் பதிவு செய்யும் அலகொன்றினை தாபித்து சாட்சிகள் பெற்றுக் கொள்ளும் பணிகளாவன கொழும்பில் மாத்திரம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த வசதியினை மாகாண மட்டத்தில் ஏற்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் நாட்டின் ஒன்பது (09) மாகாணங்களையும் தழுவும் விதத்தில் வைத்தியசாலைகளுக்கு அண்மையில் வீடியோ சாட்சிகளைப் பதிவு செய்யும் ஒன்பது (09) அலகுகளைத் தாபிக்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |