2021-06-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புதிய களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய வரை நான்கு பாதை வழிகளைக் கொண்ட தூண்களின் மீது செல்லும் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பு கருத்திட்டத்தினால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு வீடுகளை வழங்குதல் - புதிய களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய வரை நான்கு பாதை வழிகளைக் கொண்ட தூண்களின் மீது செல்லும் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்டுள்ள காணியில் அத்துமீறி குடியிருக்கும் குடும்பங்கள், அத்துமீறி குடியிருக்கும் துணைக் குடும்பங்கள் மற்றும் 6 பேர்ச்சர்களுக்கு குறைவான காணிகளில் குடியிருக்கும் குடும்பங்கள் அதேபோன்று தெமட்டகொட விளையாட்டு மைதானம் நிர்மாணிக்கப்படவுள்ள காணியில் அத்துமீறி குடியிருக்கும் குடும்பங்கள் அடங்கலாக 1,100 குடும்பங்களுக்கு மாற்று வீட்டு வசதிகளை வழங்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்படும் கொலன்னாவ, ஹேனமுல்ல மற்றும் மாளிகாவத்தை ஆகிய வீடமைப்புக் கருத்திட்டங்களிலிருந்து இந்த 1,100 குடும்பங்களுக்குத் தேவையான வீடுகளை வழங்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |