2021-05-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இரண்டாவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - இரண்டாவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 900 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கும் இந்த வங்கிக்கும் இடையில் உடன்பாடு காணப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கிழக்கு, வடக்கு, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் 3,400 கிலோ மீற்றர் கிராமிய நுழைவுப் பாதைகளை சீரமைத்து பராமரிப்பதற்கும் இந்த மாகாணங்களில் கிராமிய மக்களுக்கும் சமூக பொருளாதார நிலையங்களுக்கும் இடையிலான 340 கிலோ மீற்றர் தேசிய வீதிகளை புனரமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த நிகழ்ச்சித்திட்டமானது 2027 மார்ச் 31 ஆம் திகதியன்று பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, இரண்டாவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக உடன்பட்டுள்ள 900 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட தொகையிலிருந்து மூன்றாவது தவணையாக 200 ஐக்கிய அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கும் அதற்கான உடன்படிக்கையினைச் செய்து கொள்வதற்குமாக நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |