2021-03-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய புத்தாக்க முகவராண்மையை தாபனமயப்படுத்தல் - தேசிய புத்தாக்க சூழல் முறைமையை உருவாக்குதல், விருத்தி செய்து பேணுதல் என்பன பொருட்டு அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளைக் கூட்டிணைத்தல் மற்றும் புத்தாக்க கருத்து தோற்றம் தொடக்கம் சந்தைப்படுத்தல் வரை உரிய புத்தாக்கங்கள் சார்பில் தேவையான ஒத்துழைப்பினை வழங்குதல் என்பவற்றுக்காக 2019 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க பாராளுமன்ற சட்டத்தின் மூலம் தேசிய புத்தாக்க முகவராண்மை தாபிக்கப்படுள்ளது. தேசிய புத்தாக்க முகவராண்மையை தாபனமயப்படுத்தும் பணி கல்வி அமைச்சின் கீழுள்ள திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் முக்கிய பணியாக இனங்காணப்பட்டுள்ளது. தற்போது இந்த இராஜாங்க அமைச்சின் கீழ் செயற்படும் விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் புத்தாக்க துறைகள் சம்பந்தமான பணிகள் சார்பில் தாபிக்கப்பட்டுள்ள விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் புத்தாக்க ஒருங்கிணைப்பு செயலகத்தை தேசிய விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் புத்தாக்க ஒருங்கிணைப்பு அதிகாரசபையாக தாபிப்பதற்கு சட்டமூலமொன்றை தயாரிக்கும் பொருட்டு 2017 ஆம் ஆண்டில் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உத்தேச தேசிய விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் புத்தாக்க ஒருங்கிணைப்பு அதிகாரசபையின் நோக்கம் மற்றும் பணிகள் பெரும்பாலும் தேசிய புத்தாக்க முகவராண்மையின் பணிகளுக்கு சமமானவையாகும். ஆதலால், இந்த அதிகாரசபையினைத் தாபிக்கும் பணிகளை இடைநிறுத்துவதற்கும் விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் புத்தாக்க ஒருங்கிணைப்பு செயலகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் ஏனைய வளங்களைப் பயன்படுத்தி தேசிய புத்தாக்க முகவராண்மையை தாபனமயப்படுத்துவதற்குமாக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |