2021-03-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
காலி அக்மீமன பிரதேசத்தில் உத்தேச சதுப்புநில தாவரவியல் பூங்காவைத் தாபித்தல் - அக்மீமன பிரதேச செயலாளர் பிரிவில் நுகதூவ கிராம உத்தியோகத்தர் பிரிவின் பின்னதூவவில் அதிவேகப்பாதையின் நுழைவு பாதை அமைந்துள்ள பிரதேசத்திற்கு அண்மையில் சுமார் 26.71 ஹெக்டாயர் விஸ்தீரணமுடைய பிரதேசத்தில் தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்தினால் புதிய சதுப்புநில தாவரவியல் பூங்காவொன்றைத் தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் சதுப்புநில தாவரங்களை பாதுகாப்பதற்கு (ex-situ Conservation) தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களம் அடங்கலாக பிற எந்தவொரு நிறுவனமும் இதுவரை செயற்படாமையினால் இந்த சதுப்புநில தாவரவியல் பூங்காவினைத் தாபிப்பதன் மூலம் இந்த குறைபாடும் பூர்த்திசெய்யப்படும். அதேபோன்று உத்தேச பூங்காவைத் தாபிப்பதன் மூலம் சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதற்கும் சதுப்புநில தாவரங்கள் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சிகளுக்கு ஒத்தாசை நல்குவதற்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறும். இதற்கிணங்க, உத்தேச சதுப்புநில தாவரவியற் பூங்காவினைத் தாபிக்கும் பொருட்டு சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |