2021-02-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விநியோக மின் மாற்றிகளுடன் இணைத்து தனியார் துறை முதலீட்டின் கீழ் செயற்படுத்தப்படும் 100 கிலோவொட் சூரிய சக்தி உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம் - அரசாங்கத்தின் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக செயலாற்றி 2030 ஆம் ஆண்டளவில் மொத்த மின்சார தேவையின் ஆகக்கூடிய அளவினை மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தோற்றுவாய்களிலிருந்து பெற்றுக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு, இந்த மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கருத்திட்டங்களை கூடுதலாக தனியார்துறை முதலீட்டில் செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, தற்போது இலங்கை மின்சார சபைக்கும் இலங்கை மின்சார தனியார் கம்பனிக்கும் சொந்தமான மின்சார விநியோக மின்மாற்றிகள் 7,000 சார்பில் நிலப்பரப்பின் மீது செயற்படும் சூரிய சக்தி மின்நிலையங்களை இணைத்து மீள் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி செய்யும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தின் கீழ் இனங்காணப்பட்ட மின்மாற்றியொன்றுக்கு சூரிய சக்தி மின்நிலையம் ஒன்று வீதம் நடைமுறைப்படுத்துவதற்கும் இதன் பொருட்டு உரிய பிரதேசத்தின் பிரதேச செயலகத்தில் வியாபார பெயர்களை பதிவு செய்துள்ள ஆட்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து போட்டிகரமான அடிப்படையில் கேள்வி கோரி முதலீட்டாளர்களைத் தெரிவு செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. சூரிய சக்தி மின் நிலையமொன்றை நிர்மாணிப்பதற்காக முதலீடானது சுமார் 12 மில்லியன் ஆவதோடு, உரிய மின்மாற்றிக்கு அருகாமையில் அமைந்துள்ள 40 பேர்ச்சர்ஸ் காணியினுள் உரிய சூரிய சக்தி முறைமையானது தாபிக்கப்படுதல் வேண்டும். இதற்கிணங்க, மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு துரித கருத்திட்டமொன்றாக உத்தேச கருத்திட்டத்தை 18 மாத காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |