• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் வசிக்கும் கடன் சுமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நுண்நிதிய கடன் வசதிகளை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்ந்தும் அமுலாக்குதல்
- பல்வேறுபட்ட நுண்நிதிய கடன் திட்டங்களின் மூலம் கடன் தொகைகளைப் பெற்று கடன் சுமைக்கு ஆளாகியுள்ள கிராமிய குறைந்த வருமானம் பெறுபவர்களை இந்த கடன் சுமையிலிருந்து மீட்பதற்காக கூட்டுறவு கிராமிய வங்கிகள், சிக்கன மற்றும் கடன் கொடுக்கல் வாங்கல் கூட்டுறவு சங்கங்கள் என்பவற்றின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறைந்த வட்டியுடனான கடன் திட்டம் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் 06 மாவட்ட செயலகங்களின் ஊடாக ஏற்கனவே செயற்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது வட மாகாணம் சார்பில் 292 மில்லியன் ரூபாவும் வடமத்திய மாகாணம் சார்பில் 250 மில்லியன் ரூபாவுமாக 542 மில்லிய ரூபா இந்த கடன் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, இந்தத் தொகையானது கடன் திட்டத்தின் சுழற்சி நிதியமாக பயன்படுத்தப்படுகின்றது. கடன் சுமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக இந்த சுழற்சி கடன் நிதியை பயன்படுத்தி உரிய கடன் திட்டத்தை தொடர்வதற்கும் இதன்கீழ் தற்போது பெற்றுக் கொடுக்கப்படும் உச்ச கடன் எல்லையை 100,000/- ரூபா வரை அதிகரிப்பதற்கும் இந்த கடன் தொகைக்கான வருடாந்த வட்டி வீதத்தை 9 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைப்பதற்கும் நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.