2020-11-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க துறை ஊழியர்களின் பிணக்குகளைத் தீர்ப்பதற்காக பொறிமுறை யொன்றை அறிமுகப்படுத்துதல் - தற்போது சில அரசாங்க ஊழியர்களினால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகள், வேலை நிறுத்தம் போன்ற விடயங்கள் காரணமாக தேசிய அபிவிருத்தி குறியிலக்குகளை பூர்த்தி செய்வதில் இடையூறுகள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் உள்ளமை பற்றி தெரியவந்துள்ளது. தனியார் துறைசார்ந்த பிணக்குகள் மற்றும் வேலை நிறுத்தம் போன்றவற்றைக் குறைப்பதற்கு 1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளபோதிலும் அரசாங்க துறையில் இத்தகைய வழிமுறையொன்று இல்லை. 'சுபீட்சத்தின் நோக்கு' அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின் மூலம் தற்போது தனியார் துறையின் ஊழியர் பிணக்குகளைத் தீர்ப்பதற்காக பின்பற்றப்படும் நடுத்தீர்ப்பு செயற்பாட்டிற்கு சமமான பொறிமுறையொன்றை அரசாங்க துறைசார்ந்த பிணக்குகளைத் தீர்ப்பதற்காக அறிமுகப்படுத்தப்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அரசாங்க துறைசார்ந்த பிணக்குகளைத் தவிர்ப்பதற்கும் நடுத்தீர்ப்பு வழங்குவதற்கும் சகலருக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கலந்துரையாடல், ஆய்வு, தலையீடு மற்றும் நடுத்தீர்ப்பு ஆகிய நான்கு அம்ச மூலோபாயங்களைக் கொண்ட பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தும் பொருட்டு உரிய அமைச்சுகளின் செயலாளர்கள் உரிய தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்காக பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |