அரசாங்க பாடசாலைகளில் இரண்டாம் நிலை கல்வியின் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்ளல்
-பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கல்வித்துறைக்கு 400 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரையிலான கடன் தொகையொன்றை பெற்றுக் கொள்வதற்கு 2020 ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதற்கிணங்க, பின்வரும் துறைகளுக்கு இந்த நிதியினை முதலீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
* இரண்டாம் நிலை கல்விக்கான பாடநெறி மற்றும் மதிப்பீட்டு முறைகள் என்பவற்றை விரிவான மறுசீரமைப்புக்கு உட்படுத்துதல்.
* சகல வசதிகளுடன் கூடிய இரண்டாம்நிலை பாடசாலை முறைமையொன்றை பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் மேம்படுத்துதலும் அதன் மூலம் சகல மாணவர்களுக்கும் தரம்மிக்க இரண்டாம்நிலை கல்வி வாய்ப்பு கிடைக்கப் பெறுவதை உறுதிப்படுத்துதலும்.
* தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1,000 வரை அதிகரித்தல்.
* கல்விக் கல்லூரிகளை பட்டங்களை வழங்கும் நிலைக்கு தரம் உயர்த்துதல்.
* ஆசிரியர்களை சமநிலையில் பணிக்கமர்த்துதல் மற்றும் ஆசிரியர்களை பாடசாலைகளில் இணைத்தல் என்பனவற்றை உறுதிப்படுத்துதலும் இதன் ஊடாக மாணவர்களின் செயல்திறன் மட்டத்தை மேம்படுத்துதலும்.
'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக கல்வி மறுசீரமைப்பினை நடைமுறைப்படுத்துவதற்காக மேற்குறிப்பிட்ட 400 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தை 2020-2025 கால கட்டமைப்பிற்குள் கல்வித்துறையுடன் தொடர்புபட்ட உரிய நிறுவனங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.