2020-09-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
காணி தரவு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் காணி தகவல் சேவை முறைமை என்பவற்றை தாபித்தல் - இலங்கை நிலஅளவைத் திணைக்களத்தின் சேவைகளை மிக வினைத்திறனுடன் மேற்கொள்ளும் நோக்கில் புதிய தொழினுட்பத்தைப் பயன்படுத்தி திணைக்களத்தின் நிருவாக வலையமைப்பைத் தாபிப்பதற்கும் அதனூடாக அளவை செயற்பாடுகளை விரைவுபடுத்துவதற்கும் பயனுறுதியை அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, காணி தகவல்களை பயன்படுத்தும் தரப்பினர்களுக்கு அவர்களுடைய சேவைகளுக்காக இந்த தகவல்களைப் பயன்படுத்துவதற்கு இலகுவாகும் விதத்தில் வளர்ச்சியடைந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய காணி தகவல் சேவை முறைமையொன்றை தாபிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இலங்கை கொரிய கடன் உதவி பெற்றுக் கொள்ளும் இராஜதந்திர நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 60.33 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட முதலீட்டுடன் இலங்கை தகவல், தொடர்பாடல் தொழிநுட்ப முகவராண்மையினால் முன்வைக்கப்பட்டுள்ள சிபாரிசுக்கு அமைவாக 'காணி தரவு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் காணி தகவல் சேவை முறைமை' என்பவற்றை தாபிக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |