2020-09-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அம்பன் புயல்காற்றினால் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல் - 2020 மே மாதம் 16 ஆம் திகதியிலிருந்து 19 ஆம் திகதிவரை நான்கு (04) நாட்களாக நிலவிய அம்பன் புயல்காற்றினால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய், தெல்லிப்பளை மற்றும் கரவெட்டி போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,374 விவசாயிகளின் வாழை மற்றும் பப்பாசி செய்கைகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதோடு, அதன்போது ஏற்பட்ட மொத்த நட்டம் 52.98 மில்லியன் ரூபாவாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரினால் / அரசாங்க அதிபரினால் அறிக்கையிடப்பட்டுள்ளது. இந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது சம்பந்தமாக கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்த பிரேரிப்பின் பிரகாரம் கமத்தொழில் அமைச்சு, அனர்த்த முகாமைத்துவம் என்னும் வியடத்திற்குப் பொறுப்பான அமைச்சு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் என்பன இணைந்து வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் இதற்குத் தேவையான 52.98 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகையினை அனர்த்த முகாமைத்துவம் என்னும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சின் ஊடாக மேலதிக நிதி ஏற்பாடொன்றாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளருக்கு / அரசாங்க அதிபருக்கு வழங்குவதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது. |