2020-08-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொம்பனித் தெரு புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலுள்ள உத்தராநந்த மாவத்தையில் புகையிரதப் பாதைக்கு மேலே மேம்பாலங்களை நிர்மாணித்தல் - கொம்பனித் தெரு பிரதேசத்தில் உத்தராநந்த மாவத்தை மற்றும் நீதிபதி அக்பார் மாவத்தை என்பவற்றுக்கு குறுக்காக புகையிரத பாதை அமைந்துள்ளதன் காரணமாக உச்ச அளவில் பயன்படுத்தும் நேரங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த நிலைமையினை தவிர்ப்பதற்கு மேம்பாலங்களை நிர்மாணித்து ஒரு திசை நோக்கி செல்லும் வாகன திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக கருத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அதன் கீழ் மூன்று மேம்பாலங்களை நிர்மாணிக்கும் பொருட்டு தகைமை பெற்றுள்ள உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களிடமிருந்து கேள்வி கோருவதற்குமாக நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |