2020-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தெற்கு அபிவிருத்தி சட்டமூலம் அங்கீகரிக்கப்படும் வரை தாபிக்கப்பட்ட இடைக்கால சபையின் செயற்பாட்டை முடிவுக்கு கொண்டுவருதல் - பாராளுமன்ற சட்டமூலமொன்றின் மூலம் தெற்கு அபிவிருத்தி சபை சட்டபூர்வமாக தாபிக்கப்படும் வரை தலைவர் உட்பட ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட இடைக்கால சபையொன்றைத் தாபிப்பதற்கும் தேவையான பதவியணியினை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் 2016 மார்ச் மாதம் 30 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆயினும், தெற்கு அபிவிருத்தி சபை சட்டமூலமானது இதுவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இடைக்கால சபையினால் ஆரம்பிக்கப்பட்டிருந்த சில கருத்திட்டங்களும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, மீதி கருத்திட்டங்கள் யாவும் 2020 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, தெற்கு அபிவிருத்தி சபை சட்டமூலம் அங்கீகரிக்கப்படும் வரை தாபிக்கப்பட்ட இடைக்கால சபையின் பணிகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் வேலைகள் முடிக்கப்பட வேண்டிய கருத்திட்டங்களின் வேலைகளுக்குத் தேவையான நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |