2020-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கிராமிய பாலங்கள் கருத்திட்டம் - கருத்திட்ட காலப்பகுதியை நீடித்தல் - 1,210 கிராமிய பாலங்களை நிர்மாணிப்பதற்கான கிராமிய பாலங்கள் கருத்திட்டமானது 2013 ஆம் ஆண்டிலிருந்து 03 கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அதன்கீழ் 2019 யூலை மாதத்தில் 1,318 கிராமிய பாலங்களின் நிர்மாணிப்பு பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்தக் கருத்திட்டத்தின் II ஆம் கட்டத்தின் கீழ் மேலும் 250 கிராமிய பாலங்களையும் III ஆம் கட்டத்தின் கீழ் மேலும் 230 பாலங்களையும் நிர்மாணிப்பதற்கும் இயலுமாகும் வகையில் இந்தக் கருத்திட்டத்தின் கால எல்லையை 2020 ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிவரை நீடிப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், உரிய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல் மற்றும் ஆரம்பித்தல் என்பன தாமதமடைந்துள்ளமையினால் II ஆம் III ஆம் கட்டங்களின் கீழான கருத்திட்டங்கள் சார்பில் தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்த உடன்படிக்கைகளின் கால எல்லைகளை முறையே 2021 மே மாதம் 10 ஆம் திகதி வரையும் 2021 மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரையும் நீடிக்கும் பொருட்டு பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |