• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
04. 2020 மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் வரையிலான காலப் பகுதியில் மின்சார பட்டியற் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்காக மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
- COVID - 19 தொற்று நிலை காரணமாக 2020 மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் வரையிலான காலப் பகுதிக்குரிய மின்சார பட்டியல்கள் சார்பில் மின்சார பாவனையாளர்களுக்கு வழங்கக்கூடிய நிவாரணங்கள் தொடர்பிலான சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையானது 2020 யூலை 08 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இந்தக் குழுவின் சிபாரிசுகளை பொதுத் திறைசேரியின் உத்தியோகத்தர்களைக் கொண்டு மேலும் ஆராய்ந்து மின்சாரப் பாவனையாளர்களுக்கு வழங்கக்கூடிய நிவாரணங்கள் தொடர்பிலான பிரேரிப்புகளை சமர்ப்பிக்குமாறு குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கிணங்க, நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

i. மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களுக்கான மின்சார பட்டியல் ஒவ்வொன்றினதும் பெறுமதி பெப்ரவரி மாத மின்சார பட்டியலின் பெறுமதியை விட அதிகமாயின் பெப்ரவரி மாத மின்சார பட்டியலுக்குச் சமமான தொகையினை மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்கள் சார்பில் அறவிடுவதற்கும் இந்த மின்சாரப் பட்டியல்களை செலுத்துவ தற்கு இரண்டு (02) மாத காலம் வழங்குவதற்கும்.

ii. ஏற்கனவே மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களுக்குரிய மின்சார பட்டியல்களை செலுத்தியுள்ள மின்சார பாவனையாளர்களுக்கு எதிர்வரும் காலத்தில் மின்சார பட்டியல்களை வழங்கும் போது அவர்கள் செலுத்தியுள்ள மேலதிகத் தொகையினை பதிலீடுசெய்வதற்கு இலங்கை மின்சார சபையினால் நடவடிக்கை எடுப்பதற்கும்.

iii. மின்சார பட்டியல்களை தாமதமாக செலுத்தவதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும்.