• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் வடக்கு வீதி இணைப்புக் கருத்திட்டம் தொடர்பிலான கடன் காலத்தை நீடித்தல்
– வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் தேசிய நெடுஞ்சாலைகளினதும் மாகாண வீதிகளினதும் புனரமைப்பும் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பாலங்களின் புதிய நிர்மாணிப்பும் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் வடக்கு வீதி இணைப்புக் கருத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நோக்கம் கருதி 98 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியங்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்டுள்ளன. மதவாச்சி - ஹொரவப்பொத்தான வீதியின் இரண்டு (02) மேலதிக ஒப்பந்த பொதிகளானவை இக்கடனின் சேமிப்புகளிலிருந்து 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன. கடன் முடிவுற்ற திகதியான 2020‑06‑30 ஆம் திகதிக்கு முன்னர் கூறப்பட்ட கருத்திட்டத்தின் நிர்மாண செயற்பாடுகளை பூர்த்திசெய்வதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அதனை பூர்த்திசெய்வது சாத்தியப்பட்டிருக்கவில்லை. ஆதலால், உரிய கடன் காலப்பகுதியை 2020‑12‑31 ஆம் திகதிவரை நீடிக்கும் பொருட்டு வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.