2020-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகளை கொள்வனவு செய்தல் - 2021 - அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் உதவி கிடைக்கப் பெறும் பாடசாலைகளின் மாணவர்களுக்கும் அரசாங்கத்தினால் அனுமதிக்கப் பட்ட பிரிவெனாக்களின் பிக்கு மாணவர்களுக்கும் மாணவர்களுக்கும் இலவசமாக பாடசாலை சீருடை துணிகளை வழங்குதலானது கல்வி அமைச்சினால் 1993 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டுவரை சீருடைத்துணி வழங்குவதற்குப் பதிலாக வவுச்சர்கள் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
தற்போது நாட்டில் நிலவும் COVID - தொற்று நிலைமை காரணமாக ஏற்றுமதி வருமானம் குறைவடைந்துள்ளமை, பாடசாலை சீருடைகளுக்கான துணிகளை இறக்குமதி செய்யும் போது ஏற்கவேண்டி நேரிடுகின்ற உயர் அந்நிய செலாவணி என்பவற்றை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களை ஊக்குவித்து பாடசாலை சீருடைகளுக்குத் தேவையான துணிகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வது பொருத்தமானதென தெரிய வந்துள்ளது. இதற்கிணங்க, எதிர்காலத்தில் பாடசாலை சீருடைத்துணிகளை வழங்கும் போது வவுச்சர்களுக்குப் பதிலாக சீருடைத்துணிகளை வழங்குவ தற்கும் கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களிடமிருந்து மாத்திரம் கேள்வி நடவடிக்கைமுறையினைப் பின்பற்றி பாடசாலை சீருடைகளுக்குத் தேவையான துணி பெற்றுக் கொள்ளும் பொருட்டும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |