2020-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய இராச்சியத்தின் பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளல் - 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக மனிதவள அபிவிருத்தியின் மூலம் அறிவினை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை நோக்கிச் செல்லும் அபிவிருத்தி திறமுறை நிகழ்ச்சித்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இந்த திறமுறையைப் பின்பற்றி ஐக்கிய இராச்சியத்தின் சுகாதார ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தின் Atrial Fibrillation முகாமைத்துவம் தொடர்பில் உலகளாவிய சுகாதார குழு ஆராய்ச்சி சம்பந்தமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய இராச்சியத்தின் பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றை செய்து கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கையானது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பட்ட அபேட்சகர்களினதும் பட்டப்பின் படிப்பு அபேட்சகர்களினதும் ஆராய்ச்சிக்கான ஆற்றலை மேம்படுத்துவதற்கு ஏதுவாய் அமையும். இதற்காக பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகம் முழுமையான நிதியுதவியும் மதியுரை உதவியுமாக 209,000 ஸ்ரேலிங் பவுண்களாக ஆராய்ச்சிக் கொடையொன்றாக ஒதுக்கியுள்ளது. இதற்கிணங்க, உத்தேச ஆராய்ச்சிக் கருத்திட்டத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையினைச் செய்து கொள்ளும் பொருட்டு உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |