2020-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
150,000 வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகளை வழங்குதல் – இலங்கையின் சனத்தொகையில் 41 சதவீதத்தினை தழுவி 2.4 மில்லியன் நீர் இணைப்புகள் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையினால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதோடு, பொதுவாக வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகள் வருடாந்தம் 110,000 வழங்கப்பட்டு வருகின்றன. ஆயினும், தற்போதுள்ள குழாய் முறைமைகள் ஊடாக தழுவப்படாத வீதிகளை / பிரதேசங்களை தழுவும் விதத்தில் நீர் குழாய்கள் நீடிக்க வேண்டியுள்ளமை, புதிய நீர் இணைப்பினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு நுகர்வோருக்கு அண்ணளவாக 20,000/- ரூபாவை அடிப்படை கொடுப்பனவொன்றாக செய்யவேண்டியுள்ளமை அத்துடன் வீதி புனரமைப்பின் பொருட்டு கட்டணம் செலுத்தவேண்டியுள்ளமை போன்ற காரணங்களினால் மேலதிக ஆற்றல் இருந்த போதிலும் குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த நுகர்வோர்களுக்கு வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகளை வழங்குவதற்கு இயலாமற்போயுள்ளது.
இத்தகைய தடைகளை நீக்கும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து 2020 ஆம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளினுள் புதிதாக 150,000 வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகளை வழங்கும் துரித நிகழ்ச்சித்திட்ட மொன்றினை நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |