2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் வசிக்கும் கடன் நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு நுண் நிதி கடன் வசதியினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்தல் – பல்வேறுபட்ட நுண் நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ள கடன் காரணமாக நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ள கிராமிய வருமானம் குறைந்தவர்களை இந்த சிக்கலிலிருந்து மீட்டெடுப்பதற்கு கூட்டுறவு கிராமிய வங்கிகள் மற்றும் சிக்கன கடன் கொடுக்கல் வாங்கல் கூட்டுறவு சங்கங்கள் என்பவற்றின் ஊடாக கடன் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இதுவரை 542 மில்லியன் ரூபா திறைசேரியினால் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, தற்போது இந்த கடன் திட்டம் சுழற்சி நிதியமொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கருத்திட்டத்தின் அடிப்படை நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்தும் இந்த சுழற்சி நிதியத்தின் மூலம் உரிய கடன் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுப்பதற்கும் இதன் கீழ் தற்போது வழங்கப்படும் உச்ச கடன் எல்லையை ஆள் ஒருவருக்கு 60,000/- ரூபா வரை அதிகரிப்பதற்குமாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |