2020-01-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை மின்சாரத்துறையின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படக்கூடிய மின்சாரத் தட்டுப்பாட்டிற்கு முகங்கொடுப்பதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் - திட்டமிடப்பட்ட மின் நிலைய கருத்திட்டங்கள் தாமதமடைகின்றதன் காரணமாக நாட்டின் மின்சார கேள்வியை நிறைவு செய்வதற்கு தற்போது இலங்கை மின்சார சபை பாரிய சவாலுக்கு முகங்கொடுத்துள்ளது. ஆதலால், இலங்கையில் வலுசக்தி பாதுகாப்பு மற்றும் தன்னிறைவினை உறுதி செய்யும் நோக்கில் மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தாமதமின்றி பின்வரும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.
* நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தின் நீடிப்பொன்றாக 300X2 மெகாவொட் ஆற்றலைக் கொண்ட மின் நிலைய தொகுதியொன்றை நிர்மாணித்தல். * 300 மெகாவொட் ஆற்றலைக் கொண்ட திரவ இயற்கை எரிவாயு மின் நிலையமொன்றை இலங்கை மின்சார சபை இந்தியா / யப்பான் இணைந்து கூட்டுத் தொழில்முயற்சியொன்றாக கெரவலப்பிட்டிய பிரதேசத்தில் தாபித்தல். * ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியத்தின் கீழ் கெரவலப்பிட்டிய பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள 300 மெகாவொட் ஆற்றலைக் கொண்ட திரவ இயற்கை எரிவாயு மின் நிலையத்தின் நிர்மாணிப்பு பணியினைத் துரிதப்படுத்தல். * இலங்கை மின்சார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் நீர் மின் நிலையங்கள் மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கருத்திட்டங்களின் நிர்மாணிப்பு பணிகளைத் துரிதப்படுத்தல். * சூரிய சக்தி மின் உற்பத்தி சார்பில் இந்திய அரசாங்கத்தினால் வழங்குவதற்கு உடன்பட்டுள்ள 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் தொகை மூலம் உரிய கருத்திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்துதல். |