2020-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வறுமை ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் - 'சுபீட்சத்தின் நோக்கு' என்னும் அரசாங்கத்தின் தேசிய கொள்கையின் கீழ் முழுமையானதும் பொருத்தமானதுமான அபிவிருத்தியினை உருவாக்கும் பொருட்டு நாட்டில் வறுமையை ஒழிப்பது அரசாங்கத்தின் அதி முன்னுரிமை வாய்ந்த விடயமாக இனங்காணப்பட்டுள்ளது. 'சுபீட்சத்தின் நோக்கு' என்னும் அரசாங்கத்தின் தேசிய கொள்கையின் மூலம் இனங்காணப்பட்டுள்ள அபிவிருத்தி குறியிலக்குகள் ஐக்கிய நாடுகளின் நிலைபேறுடைய 17 அபிவிருத்தி குறியிலக்குகளுடன் ஒத்திசைவானதாகும். இதற்கிணங்க நாட்டில் வறுமையை இல்லாதொழிப்பதனை நோக்காகக் கொண்டு பின்வரும் பிரேரிப்புகளை முன்னுரிமை அடிப்படையில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. * குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அத்தியாவசிய உணவு வழங்கி உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல். * 100,000 வறிய குடும்பங்களுக்கு 100,000 தொழில் வாய்ப்புகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம். * “வீடொன்று - கிராமமொன்று" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வறிய குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துதல். * ஆகக்குறைந்தது பத்து இலச்சம் வீடுகளுக்கு தரமான வீதி வசதிகளை வழங்கும் பொருட்டு 100,000 கிலோ மீற்றர் கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்'. * சிறிய அளவிலான தொழில் முயற்சிகளின் அபிவிருத்தி, சுய தொழில்வாய்ப்பு, வீட்டுத் தேவைகள் மற்றும் வீட்டு வாழ்வாதார நிகழ்ச்சித்திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து கடன்களுக்கான இலகு அணுகுமுறைகளை ஏற்பாடு செய்தல். |