2019-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய பாதுகாப்பு கல்லூரி சட்டத்தினை வரைதல் - தேசிய பாதுகாப்பு தொடர்பில் உயர்மட்ட பாடநெறிகளை நடாத்துவதற்கு இலங்கையில் தேசிய பாதுகாப்பு கல்லூரியொன்று இல்லாததன் காரணமாக முப்படைகளையும் சேர்ந்த உத்தியோகத்தர்கள் இத்தகைய பாடநெறிகள் நடாத்தப்படும் சீனா இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள பாதுகாப்பு கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த நாடுகளிலிருந்து வருடாந்தம் கிடைக்கப் பெறும் பாடநெறிகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டதன் காரணமாக எதிர்பார்த்தவாறு உத்தியோகத்தர்களை பயிற்றுவிப்பதற்கு இயலாமற்போயுள்ளது. இந்த நிலைமையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இலங்கையில் தேசிய பாதுகாப்பு கல்லூரியொன்றைத் தாபிப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கிணங்க, தேசிய பாதுகாப்பு கல்லூரியினைத் தாபிப்பதற்குரிய சட்டமூலமொன்றை வரையும் பொருட்டு மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமானவர் சமர்ப்பித்த பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |