2019-12-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பாடசாலை முறைமையில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரித்தலும் மாவட்ட ரீதியில் புதிய மும்மொழி பாடசாலைகளைத் தாபித்தலும் - சுதந்திரமானதும் சமத்துவமானதும் தரம் மிக்கதுமான கல்வியினை பிள்ளைகள் அனைவருக்கும் வழங்குவதனை நோக்காகக் கொண்டு பிரதேச செயலக பிரிவுகள் ஒவ்வொன்றிலும் சகல வசதிகளுடன்கூடிய மூன்று பாடசாலைகள் வீதம் அபிவிருத்தி செய்து இந்தப் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதன் மூலம் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரிக்கும் பொருட்டு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் மும்மொழிகளையும் கற்கும் வாய்ப்புடன் கூடிய சகல வசதிகளுடனுமான தேசிய பாடசாலை ஒன்றுவீதம் ஆரம்பிப்பதற்கும் எதிர்வரும் இரண்டு (02) வருட காலப்பகுதிக்குள் இத்தகைய 20 பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கும் கல்வி அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உத்தேச நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |